தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த ஆண்டு முதல் அலையை காட்டிலும் தற்போது உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு கொரோனா உருமாறி மிகவும் சக்தி வாய்ந்த வைரஸாக மாறியிருப்பதே காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் இளைஞர்கள் அதிக அளவில் பாதிப்பிற்கு ஆளாவது மட்டுமின்றி உயிரிழப்புகளையும் சந்திக்கின்றனர்.
எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மட்டுமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்வதிலும் ஆர்வம் அதிகரித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் போதிய அளவில் இருப்பு இல்லாத காரணத்தால் இந்த திட்டம் இன்னும் முழுமையான செயல்பாட்டிற்கு வரவில்லை.
அதேசமயம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தடுப்பூசி செலுத்தி கொள்ள இளைஞர்கள் முன்வந்த வண்ணம் உள்ளனர். தற்போதைய சூழலில் தடுப்பூசி ஒன்றே தீர்வாக இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், அலுவலர்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனே அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
அதன்பின்னர் தடுப்பூசி போட்டுக் கொண்ட விவரத்தை பள்ளிக்கல்வித்துறையின் இணையதளத்தில் பதிவிட வேண்டும். இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கோவிட்-19 ஷீட்டில் அப்டேட் செய்ய வேண்டும். அதில் முதல் தவணையா? இரண்டாவது தவணையா? மொத்தம் எத்தனை தடுப்பூசி போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும். இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவித்து தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். சில தனியார் பள்ளிகளில் மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது பள்ளிகள் திறப்பின் போது மிகவும் நம்பிக்கையுடன் பணியாற்ற உதவிகரமாக இருக்கும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
~ நன்றி சமயம்





















13 thoughts on “தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு; கல்வித்துறை அதிரடி!”
Comments are closed.