சென்னை: பயணிகள் வரத்து அதிகரித்து வருவதால் ரத்து செய்யப்பட்டு இருந்த 10 சிறப்பு ரயில்கள் ஜூன் 20-ம் தேதியில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 3 மாதங்களாக கடும் ஆட்டம் காட்டி வந்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தற்போது இறங்கு முகத்தை சந்தித்து வருகிறது.
தமிழ்நாட்டில் ஒரு கட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 36,000-க்கு மேல் சென்ற நிலையில் தற்போது தினசரி பாதிப்பு 10,000-க்கும் கீழ் குறைந்து விட்டது.
ரயில்கள் ரத்து
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாலும், கொரோனா உச்சம் காரணமாகவும் பயணிகள் வரத்து வெகுவாக குறைந்ததால் தமிழ்நாட்டில் இயக்கப்பட்டு வந்த பல்வேறு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்தது.
20-ம் தேதி முதல் இயக்கம்
இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. பஸ் போக்குவரத்து தொடங்குவது மட்டும்தான் பாக்கி. இதனால் இப்போது பயணிகள் வரத்து அதிகரித்து வருவதால் ரத்து செய்யப்பட்டு இருந்த 10 சிறப்பு ரயில்கள் ஜூன் 20-ம் தேதியில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
சென்னை-மேட்டுப்பாளையம்
அதன் விவரம் பின்வருமாறு:- மதுரையில் இருந்து திருநெல்வேலி திருவனந்தபுரம் வழியாக புனலூர் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சியில் இருந்து எலும்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ஜூன் 20-ம் தேதியில் இருந்து இயக்கப்படும்.
மதுரை-திருவனந்தபுரம்
எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ், கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், மதுரையில் இருந்து பாலக்காடு வழியாக திருவனந்தபுரம் செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆகியவையும் ஜூன் 20 முதல் இயக்கப்படும். சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் சிறப்பு ரயில் தஞ்சாவூர் மெயின் லைன் வழியே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
~ நன்றி OneIndia





















18 thoughts on “தமிழ்நாட்டில் ரத்து செய்யப்பட்ட 10 ரயில்கள் ஜூன் 20 முதல் இயக்கம்”
Comments are closed.