ரேஷன் கடைகள் மூலம் அத்யாவசிய மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பண்டிகை காலத்தின் போது பொங்கல் பரிசு, போன்றவையும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாது கடந்த ஆண்டு முதல் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக வாழ்வாதாரம் இழந்தோருக்கு உதவும் வகையில் நிதி உதவியையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும் நிவாரணமாக மளிகைப் பொருட்கள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், நாங்கள் வெற்றி பெற்றால், ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக 4000 ரூபாயும், குடும்பத் தலைவிகளுக்கு மாதா மாதம் 1000 ரூபாய் உதவித் தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு முதற்கட்ட கொரோனா நிவாரணமாக 2,000 ரூபாய் வழங்கப்படும் என மே மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கான டோக்கனும் தற்போது வழங்கப்பட்டு நிவாரண உதவியுடன் சேர்த்து 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி ஆவின் பால் லிட்டருக்கு ரூ.2 குறைப்பு, பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் போன்ற திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றியிருப்பதால், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து புதிதாக ரேஷன் கார்டு கோரி விண்ணப்பம் செய்வோரின் எண்ணிக்கை தமிழகம் முழுவதும் கணிசமாக அதிகரித்துள்ளது.
ஒரே குடும்ப அட்டையில் கூட்டுக் குடும்பமாக பெயர்கள் வைத்திருப்போர்கள் தனியாக கார்டு கோரியும், புதிதாக திருமணம் செய்தோர்களும், இதுவரை குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்யாதவர்கள் தற்போது இணையதளம் வாயிலாகவும், இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கிடையே குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த அனைத்து நபர்களுக்கும் 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீப நாட்களாக புதிய ரேஷன் கார்டு கோரி ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்து வருவதாக குடிமைப் பொருள் வழங்கல் துறையினர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
~ நன்றி News18 தமிழ்





















9 thoughts on “குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹1000 வாக்குறுதியால், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்போர் அதிகரிப்பு!”
Comments are closed.