2023 ம் ஆண்டிற்கான எஸ்ஆர்எம் தமிழ்ப்பேராயத்தின் விருதுகள் பற்றிய பட்டியலை தமிழ்ப்பேராயத்தின் நிறுவனரும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பதிவாளர் சு. பொன்னுசாமி இன்று சென்னையில் வெளியிட்டார்.
சென்னை எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் வடபழனி வளாகத்தில் அமைந்துள்ள கலையரங்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழ்ப்பேராயத்தின் விருதுகள் பற்றிய பட்டியலை வெளியிட்டு நிகழ்வில் தமிழ்ப்பேராயத்தின் தலைவர் முனைவர் கரு. நாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
இந்திய அளவில் பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், சட்டம், மேலாண்மையில், கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கு மிக சிறந்த உயர் கல்வி நிறுவனம் என பேர்பெற்று விளங்கும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்,இந்திய மொழிகளுக்கு சாகத்திய ஆகாதமி உள்ளது போல மற்ற எந்த கல்வி நிறுவனங்களிலும் இல்லாத வகையில் தமிழுக்கென்று தமிழ்மொழி, இலக்கியம், கலை, பண்பாட்டு வளர்ச்சி குறித்த விழிப்புணர்ச்சியை உலகமுழுவதும் உருவாக்கும் நோக்கத்துடன் 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் எஸ்ஆர்எம் தமிழ்ப்பேராயம் என்ற அமைப்பாகும்.இதனை தமிழ் மொழி மீது ஆழ பற்றுக்கொண்ட எஸ்ஆர்எம் கல்விக் குழுமங்களின் நிறுவனர் வேந்தர் டாக்டர் டி. ஆர். பாரிவேந்தர் ஏற்படுத்தினார்.
தமிழகம் எங்குமுள்ள சிறந்த தமிழறிஞர்கள், படைப்பாளிகள், அரசுசார் தமிழமைப்புகளின் தலைவர்கள் ஆகியோர்களைக் கொண்ட குழுக்களின் அறிவுரைகளின்படி இத் தமிழ்ப்பேராயம் இயங்குகிறது. இது விருப்பு, வெறுப்பற்ற நடுநிலையான செயல்பாடுகளைக் கொண்ட அமைப்பாகும்.
தமிழ் அருட்சுனைஞ்சர் (archakarkal):
திருக்கோயில்களில் வழிபாடுகள், குடமுழுக்குகள் மற்றும் அனைத்து விதமான வாழ்வியல் சடங்குகள் உள்ளிட்டவை தமிழிலேயே நடத்துவதற்குரிய தகுதி வாய்ந்த அர்ச்சகர்களை உருவாக்க வேண்டுமென்ற சீரிய நோக்குடன் 2011ம் ஆண்டு முதல் இப்படிப்பு தமிழ்ப்பேராயம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 1000க்கும் மேற்பட்டவர்கள் இப்படிப்பில் சேர்ந்து பயின்று தகுதி வாய்ந்த அர்ச்சகர்கள் உருவாகி பல்வேறு நாடுகளிலும் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் செயலாற்றி வருகின்றனர்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக ஆகலாம் என்ற தமிழ்நாடு அரசின் ஆணையின் மூலமாக இங்கு பயின்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது நோக்குதற்க்குரியாது.
தமிழ்ப்பேராயம் விருதுகள் :
தமிழ்ப்பேராயத்தின் பணித் திட்டங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று தமிழ்ப்பேராய விருதுகள் திட்டம். 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் பன்னிரண்டு தலைப்புகளில் சிறந்த தமிழ் நூல்கள், தமிழறிஞர்கள் மற்றும் சீரிய தமிழ்ப் பணியாற்றும் தமிழ் இதழ்கள் மற்றும் தமிழ்ச் சங்கங்கள் பயன்பெறும் விதத்தில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுவரையில் 2 கோடியே 20 இலட்சம் அளவிலான பரிசுத் தொகை இதற்காக வழங்கப்பட்டுள்ளது. இதுவரையில் 100க்கும் மேற்பட்ட படைப்பாளர்கள் விருது பெற்றுள்ளனர். அவர்களில் அமெரிக்கா, கனடா, இலங்கை, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களும் படைப்பாளர்களும் அடங்குவர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அறிஞர்களுக்கும் தமிழ் அமைப்புகளுக்கும் விருதுகள் அளிக்கப்பட்டுள்ளமை நோக்குதற்குரியது. தமிழ்ப்பேராய விருதுகள் உரிய தகுதிவாய்ந்தோர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதத்தில் தமிழ்ப்பேராய விருதாளர்கள் அதன்பிறகு சாகித்திய அகாடெமி விருதுகளையும் செம்மொழித் தமிழாய்வு நிறுவன விருதுகளையும் மற்றும் குடியரசுத் தலைவர் விருதுகளையும் பெற்றுள்ளமை குறிக்கத்தக்கது.
2022 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிப்பு பற்றிய தகவல் ஏழு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு, 559 பரிந்துரைகள் வரப்பெற்றன. அவற்றுள் தகுதி வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுக்க, ஏற்கெனவே இரண்டு நிலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதியாக ஓய்வுபெற்ற மாண்புமிகு நீதியரசர் விமலா அவர்கள் தலைமையில் அறிஞர் குழுவினர் விருதாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
தொடர்ந்து விருது பெற்றவர்கள் விவரத்தினை எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் சு. பொன்னுசாமி வெளியிட்டார்.
விருதுகள் பற்றிய பட்டியல் விவரம் வருமாறு :
விருதின் பெயர்
நூல் / விருதாளர் பெயர்
1.புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது: சிலாவம் -சு. தமிழச்செல்வி
- பாரதியார் கவிதை விருது: நினைவின் ஆழியில் அலையும் கயல்கள் -ரவி சுப்பிரமணியன்
3.அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது: 1, பெரிய தாத்தா -அருண். மோ,2, கடலுக்கு அடியில் மர்மம் -சி. சரிதா ஜோ
4.ஜி.யூ. போப் மொழிபெயர்ப்பு விருது :பாஸ்டின் -பட்டு எம். பூபதி
5.ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அறிவியல் தமிழ் மற்றும் தொழில்நுட்ப விருது :இதம் தரும் இதயம் -முனைவர் க. மகுடமுடி
6.முத்துத்தாண்டவர் தமிழிசை விருது : இந்த விருதுக்குரிய தகுதியான பரிந்துரைகள் கிடைக்கபெறவில்லை
7.பரிதிமாற்கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது : தனித்தமிழ் இயக்கம் ஒரு நூற்றாண்டு வரலாறு -முனைவர் க. தமிழமல்லன்
8.முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது: நிலத்தியம்மன் அரசியல் -முனைவர் சிவ. இளங்கோ
9.சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது : மானுடம் -சமூக அரசியல் பண்பாட்டு காலண்டிதம்
10.தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது: மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம்
11.அருணாசலக் கவிராயர் விருது :மறத்தமிழன் கலைக்குழு
12.பாரிவேந்தர் பைந்தமிழ் விருது: பேராசிரியர் -எழுத்தாளர் சிவசங்கரி
முடிவில் தமிழ்ப்பேராயம் செயலாளர் முனைவர் ஜெய் கணேஷ் நன்றி கூறினார்.




















