சென்னை, 28 ஜூன் 2021: வேளாண் அறிவியல் தமிழ் இயக்கத்தின் நிறுவுனர் & முதன்மை விஞ்ஞானி முத்தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 12 அரசு வேளாண் கல்லூரிகள் கோவை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர்,
புதுக்கோட்டை, மதுரை, தேனி, தூத்துக்குடி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மட்டுமே அமைந்துள்ளன.
அண்டை மாநிலங்களுக்கு வேளாண்மை கற்பித்த வரலாறும் சிறந்த மண் வளமும் நீர் வளமும் முன்னோடி உழவர்களும் பயிர் உற்பத்தியும் நிறைந்திருக்கும் சேலம்
மாவட்டத்தில் இது வரை அரசு வேளாண் கல்லூரி அமைந்திடவில்லை.
அறிவியல் உலக வழக்கப்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தகுந்த நிலஅமைப்பு, மண், நீர், காலநிலை,
சமூகக்கூறுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே வேளாண்மை ஆராய்ச்சிகளும்
திட்டங்களும் முறைப்படுத்தப்படும். அந்த வகையில் சேலம் மாவட்டத்திற்குகந்த வேளாண்மை
ஆராய்ச்சி கொண்ட வேளாண்மைக் கல்லூரி இல்லாதது பெரும் குறை.
ஆகவே சேலம் மாவட்டத்தில் உகந்த பகுதியில் வேளாண்மைக் கல்லூரி ஒன்றினை அரசின் சார்பாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகத் தொடங்குமாறு அரசை வலியுறுத்திடத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
அக்கல்லூரியை, இந்தியப் பசுமைப்புரட்சியின் தந்தையும், தன் தாய் மொழியில் வேளாண்மையைக் கற்பித்திடக் குரல் கொடுப்பவரும் செயல்படுவருமான பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் பெயரில்
(பிறந்தநாள்: 7.8.1925) அவர் வாழும் காலத்திலேயே அமைத்திடல் கூடுதல் சிறப்பாகும்.
விரைவில் சட்டப்பேரவையில் நிகழவுள்ள ‘வரவு செலவு அறிக்கை’ அமர்வில் இது குறித்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அறிவிப்பை நிகழ்த்தித் தர ஆதரவு நல்கிடத் தாழ்மையுடன் வேண்டுகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.



















14 thoughts on “வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் அரசு வேளாண்மைக் கல்லூரி அமைக்கக் கோரிக்கை”
Comments are closed.