புதுடெல்லி: ஜப்பானிய இரு சக்கர வாகன நிறுவனமான யமஹா இந்தியா மற்றும் பிற உலகளாவிய சந்தைகளுக்கான புதிய மின்சார வாகனத்துக்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் நாட்டில் மின்சார வாகனங்கள் குறித்து அரசாங்கம் ஒரு தெளிவான வழிமுறையையும் நிலையான கொள்கையையும் வகுத்த பின்னரே மின்சார வாகன தளத்தில் நிறுவனத்தின் முதலீடுகள் தொடங்கும் என்று நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த மாதம் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு (e2W) ஊக்கத்தொகையை அதிகரித்த FAME II திட்டத்துடன் மின்சார வாகனங்களுக்கு (EV கள்) அரசாங்கம் ஊக்கம் கொடுத்துள்ள நிலையில், உள்கட்டமைப்பு, சார்ஜிங் நிலையங்கள், பேட்டரி உற்பத்தி மற்றும் பிற மாற்றங்களைப் பற்றியும் இனி அரசாங்கம் யோசிக்க வேண்டும்.
“எங்கள் ஜப்பான் தலைமையகத்தில் நாங்கள் ஏற்கனவே இதற்கான ஒரு பிரத்யேக குழுவைக் கொண்டுள்ளோம். இந்தியா மற்றும் பிற உலகளாவிய சந்தைகளுக்கான புதிய மின்சார வாகன தளத்தில் பணியாற்றி வருகிறோம்” என்று யமஹா மோட்டார் (Yamaha Motors) இந்தியா குழுமத்தின் தலைவர் மோட்டோபூமி ஷிதாரா பி.டி.ஐ-யிடம் தெரிவித்தார்.
மின்சார வாகனத் (Electric Vehicle) துறையில், இயக்கத்திற்காக இந்தியாவில் புதிய முதலீடுகளை செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதா என்று கேட்கப்பட்டதற்கு, ஷிதாரா, “தற்போது, முதலீடுகள் தொடர்பான பெரிய சவால்கள் உள்ளன. இந்திய அரசு தெளிவான வழித்தடங்களையும் நிலையான கொள்கையையும் வகுக்காவிட்டால் இதை நிவர்த்தி செய்ய முடியாது ” என்று கூறினார்.
EV-களின் வெற்றி வாடிக்கையாளர்கள் அவற்றை எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை பொறுத்து உள்ளது. சரியான உள்கட்டமைப்பு, சார்ஜிங் நிலையங்கள், பேட்டரி உற்பத்தி மற்றும் மின்சார வாகனங்களுக்கான உள்கட்டமைப்பை மாற்றினால் மட்டுமே வாடிக்கையாளர் திருப்தி இதில் சாத்தியப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.
இருப்பினும், யமஹா சமீபத்தில் அறிமுகப்படுத்திய Fascino 125 Fi Hybrid ஸ்கூட்டர் (Hybrid Scooter) நிறுவனத்தின் “இந்திய சந்தையில் ஈ.வி. தளத்தில் நுழைவதற்கான முதல் படியாகும்” என்று அவர் கூறினார்.
மின்சார சக்தி உதவியுடன் கூடிய பாசினோ 125 ஃபை ஹைப்ரிட், “யமஹாவால் மின்சார வாகனத் துறையில் மேற்கொள்ளப்பட்ட பல தொழில்நுட்ப முன்னேற்றங்களில் ஒன்றாகும். இதை காலப்போக்கில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்று அவர் கூறினார்.
“ஆனால் இந்திய சந்தைக்கான மின்சார வாகனத்தை பற்றி முடிவெடுக்கும் முன்னர் விலை, செயல்திறன் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற காரணிகளைப் பற்றி சிந்தித்து வருகிறோம்” என்று ஷிதாரா கூறினார்.
46 thoughts on “இந்திய சாலைகளில் விரைவில் பறக்க வருகிறது யமஹா மின்சார பைக்!!”
Comments are closed.